50 பேரை காப்பாற்றிய அடுத்த நொடியே உயிரை விட்ட டிரைவர்! - சென்னையில் நடந்த நெகிழ்ச்சி

தன் உயிர் போகும் நேரத்தில் கூட சமயோஜிதமாக செயல்பட்டு 50 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி நெகிழ்வைத்துள்ளார் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர்.

திருவள்ளூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வரும் விரைவு அரசுப் பேருந்தை இன்று அதிகாலை 47 வயதாகும் டிரைவர் ரமேஷ் ஒட்டி வந்துள்ளார். 50 பயணிகளுடன் கோயம்பேட்டுக்கு பயணித்துள்ளார். பூந்தமல்லி அருகே வரும் போது ரமேஷூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலி அதிகமாக தனக்கு மாரடைப்பு அறிகுறி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த ரமேஷ் உடனடியாக மிகவும் சமயோஜிதமாக யோசித்து பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று, பேருந்தை மெதுவாக இயக்கி சாலையின் ஒதுக்குபுறமாக நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்திய மறுநிமிடமே தன் நெஞ்சில் கைவைத்தபடி ஸ்டியரிங்கின் மீது தலைகவிழ்ந்தபடி சரிந்தார். ஆம், 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அவரின் மூச்சு நின்றுபோனது.

ரமேஷ் நெஞ்சில் கைவைத்து சாயவும், பதறிப்போன பயணிகள் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று பயனில்லாமல் போய்விட்டது. இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் உயிர் போகும் நேரத்தில் கூட சமயோஜிதமாக செயல்பட்டு 50 பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய ரமேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

More News >>