ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் ??-அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இதுகுறித்து  அவர் பேசியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் ஒப்புதல் அளிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைக் குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ.74.91க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.66.44 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசலின் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>