திமுக ஆட்சிக்கு வந்தா டாஸ்மாக் கடையை மூட றோம்னு சொன்னோம், நீங்க ஓட்டுப் போடல... கிராம சபைக் கூட்டத்தில் பெண்களிடம் ஆதங்கப்பட்ட மு.க.ஸ்டாலின்!

கடந்த தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தும் நீங்கள் தான் ஓட்டுப் போடவில்லை என்று கிராம சபைக் கூட்டத்தில் புகார் கூறிய பெண்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதங்கப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் கூட சரி செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது எனக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மாவட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறார்.

கிராம சபைக் கூட்டங்களில் தங்கள் ஊரின் குறைகளைக் கூறும் பெண்களில் பலர் தவறாமல் மதுக்கொடுமையையும் கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் பெண் ஒருவர் டாஸ்மாக்கை மூடாவிட்டால் உங்களுக்கு ஓட்டு இல்லை என்று ஸ்டாலினிடம் நேருக்கு நேராகவே தெரிவித்தார்.

இன்று தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி இல்லை ... இல்லை ... என்று அடுக்கிய பெண்கள், படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறிவிட்டு நாங்கள் கேட்காமலே மதுக்கடைகளை கூடுதலாகத் திறக்கிறார்கள் என்று அதிமுக அரசு மீது கோபப்பட்டு குற்றச்சாட்டு வைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம், நீங்கள் தான் ஓட்டுப் போட வில்லை என்று ஆதங்கப்பட்டார். தற்போது மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. திமுக கை காட்டுபவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறார்கள். தமிழ்நாட்டிற்கும் விடிவு காலம் வராதா? என மக்கள் மத்தியில் ஏக்கம் உள்ளது. நாங்கள் நம்புகிறோமோ, இல்லையோ, திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றார் ஸ்டாலின் .

 

'மதுக்கடையை மூடினாத்தான் உங்களுக்கு ஓட்டு' - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை அதிர வைத்த பெண்மணி!

More News >>