டி20 போட்டியில் சுரேஷ் ரெய்னா அதிரடி சதம்!

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் உத்திரப் பிரதேசம் அணி தரப்பில் சுரேஷ் ரெய்னா சதம் விளாசியுள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் உத்திரப் பிரதேச அணியும், மேற்கு வங்க அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற உத்திரப் பிரதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய உ.பி. அணியில் தொடக்க வீரர் சமர்த் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சௌத்ரி 8 ரன்களில் அவுட்டானார். இதனால், உத்திரப்பிரதேச அணி 55 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும், அஷ்தீப் நாத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மேற்குவங்க அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இது டி20 போட்டியில் அவரது நான்காவது சதம் ஆகும்.

அதிரடியாக ஆடிய சுரேஷ் ரெய்னா 49 பந்துகளில் சதம் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அஷ்தீப் நாத் 43 பந்துகளில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் உத்திரப் பிரதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுரேஷ் ரெய்னா 59 பந்துகளில் 126 ரன்கள் எடுத்திருந்தார்.

More News >>