`சடலமாக கிடந்த மூதாட்டி கண்டுகொள்ளாத பொதுமக்கள் - நாகூர் தர்கா அருகே நடந்த சோக சம்பவம்!

நாகூர் தர்கா அருகே மூதாட்டி ஒருவர் சாலையில் சடலமாக கிடந்த நிலையில் அவரை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கி நேற்று நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேண்டு வாத்திய முழக்கங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் ஒருபுறம் விமர்சையாக நடைபெற மற்றொரு இன்னொரு சோக சம்பவம் நடந்துள்ளது.

கந்தூரி விழாவைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து சென்ற நிலையில், தர்கா வாசலில், மூதாட்டி ஒருவர் சாய்ந்த நிலையில் நீண்ட நேரம் இருந்துள்ளார். இவர் உயிரிழந்து சடலமாக வாசலில் கிடந்துள்ளார். அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிந்துகொண்ட பொதுமக்கள் பலரும், கண்டும், காணாதது போல் கடந்து சென்றனர்.

பல மணி நேரமாக மூதாட்டி சடலமாக தர்கா வாசலின் அருகே கிடக்க அவரை அகற்ற தர்கா நிர்வாகமோ, நகராட்சி ஆட்களோ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தகவல் அறிந்த ``விசுவாசமான நட்புக்கரங்கள்'' என்ற அமைப்பினர் மூதாட்டியின் சடலத்தை அகற்றினர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த மூதாட்டி நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதாம்பாள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினரால் விரட்டப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

 

உலக முதியோர் தினம்-கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும்

More News >>