எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆரூடம்

ஜெயலலிதா பிறந்தநாள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதா கனவை சிதைத்து, அ.இ.அ.தி.மு.கவை சிதைத்த அவர் அதன்பிறகு சிறைக்குச் செல்வார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக ஆளும் கட்சி தரப்பிலும், டிடிவி தினகரன் அணி தரப்பிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கரூரில் டி.டி.வி.தினகரனை வைத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நடத்துவதற்காக ஆலோசனைக் கூட்டம் கரூரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய செந்தில் பாலாஜி, `இன்னும் 30 நாள்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தில் கவிழும். அது எப்படி என்பதைப் பொறுத்திருந்துப் பாருங்கள். ஜெயலலிதா பிறந்தநாள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

ஜெயலலிதா கனவை சிதைத்து, அ.இ.அ.தி.மு.கவை சிதைத்த அவர் அதன்பிறகு சிறைக்குச் செல்வார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 15 நாள்களில் குக்கர் சின்னம் வாங்கி டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் அபாரமாக வெற்றி பெறுவோம். எடப்பாடி, ஒ.பி.எஸ் அணியினர் டெபாசிட் இழப்பார்கள். மக்களை அல்லல்படுத்தும் விதமாக பஸ் கட்டணத்தை திடீரென்று உயர்த்தியுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

More News >>