அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் - உடன்பாடு கையெழுத்தானது!

அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது.

காலையில் பாமகவுக்கு 7 +1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுக கூட்டணியில் உடன்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் டெல்லியிலிருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் அதிமுக தரப்புடன் பேச்சு நடத்தினார்.

பாஜக தரப்பில் பியூஸ் கோயலுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்து பின்னர் உடன்பாடு எட்டப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பாமகவுடன் உடன்பாடு செய்தது போல் 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை பாஜக ஆதரிக்கும் என்றும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

More News >>