சண்டை.... சச்சரவு... சமாதானம்.... - ட்விட்டரில் காரசாரமாக மோதிக்கொண்ட விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி!

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எல்.கே.ஜி. இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் 22-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே இந்தப் படத்துக்கு காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பெரிய ஹீரோ படங்களுக்கு தான் தியேட்டர் நிர்வாகம் மார்னிங் ஷோ ஏற்பாடு செய்யும். தான் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கே மார்னிங் ஷோ கிடைத்ததால் உற்சாகமாக இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் இங்கு தான் தேவையில்லாத விவாதம் ஏற்பட்டது.

ஆர்.ஜே.பாலாஜி டுவீட் பதிவிட்ட அதேநேரம் ``5 மணி ஷோ தன் மதிப்பை இழந்துவருகிறது" என ஆர்.ஜே.பாலாஜியை சாடும் வகையில் நாலைந்து பதிவுகளை நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டார். அவரின் இந்தப் பதிவுக்கு எதிர்மறையான கமெண்டுகள் வர ஆரம்பித்தன. உடனே சுதாரித்துக்கொண்ட விஷ்ணு, ``சின்ன பட்ஜெட் படங்களுக்கு 5 மணி ஷோ கிடைப்பது ஆரோக்கியமான விஷயம்தான். நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ஆரோக்கியமான விமர்சனங்கள் என்ற பெயரில் பொது மக்களைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்களைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

விவகாரம் இதோடு முடியும் என்று பார்த்தால் விஷ்ணு விஷாலுக்கு பதிலளித்து கருத்து பதிவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``நான் மிடில் கிளாஸ் பையன். என்கூட வேலை செஞ்ச முக்கால்வாசி பேருக்கு இது முதல் படம். இந்தப் படத்துக்கு, நாங்க உழைச்சு மெரிட்ல சீட் வாங்கினாதான் உண்டு. ஏன்னா, எங்க யூனிட்ல யாருடைய அப்பாவும் தீயணைப்புத் துறையில தலைமை பொறுப்புல இல்லை. அதை வெச்சு ஷோ எல்லாம் வாங்கமுடியாது" என விஷ்ணு விஷாலின் தந்தையை இந்த விவகாரத்தில் இழுத்தார்.

உடனே விஷ்ணு விஷால், "என் அப்பா தீயணைப்புத் துறையில் கடந்த இரண்டு வருடமாகப் பணியாற்றியது, வர்தா புயலின்போது பல உயிர்களைக் காப்பாற்றியது எல்லோருக்கும் தெரிந்தது தான். மெரினா போராட்டத்தின்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியும்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் இருவரின் மோதல், தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்த சிறிது நேரத்தில் இருவருமே சமாதானம் ஆகிவிட்டனர். இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு சமரசம் ஆகியதுடன் ஒருவருக்கொருவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், பழைய விவாதங்களையும் டெலிட் செய்துவிட்டனர்.

More News >>