பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிய கொடூர தந்தை: சிசிடிவியின் மூலம் சிக்கினார்

பெய்ஜிங்: சீனாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளதை அடுத்து குழந்தையை வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று இருந்தததை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் உள்பட சிலர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, பதிவாகி இருந்த காட்சியில் வாலிபர் ஒருவர் அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி சென்றது பதிவாகி இருந்தது. இதை ஆதாரமாக கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடித்து கைது செய்தனர்.மேலும், அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், “அந்த குழந்தை அந்த நபருடையது தான் என்பதும். குழந்தை பிறந்ததும் ஊதா நிறத்தில் மாறியதால் அதற்கு ஏதோ கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகவும்” குழந்தையின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால் நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்பின்னர், குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார் பெற்றோரை கைது செய்ததை அடுத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>