`அப்போது சிம்ம சொப்பனம் இப்போது குற்றவாளி - முறைகேடால் சிக்கிய சனத் ஜெயசூர்யா!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட சனத் ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.

இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன், முச்சதம் அடித்த இலங்கை வீரர் எனப் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த அவருக்கு இது போதாத காலம் போல. சமீபத்தில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, வீரர்களை நியமனம் செய்ததில் முறைகேடு என தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார்.

இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தபோது வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடத்தியதாக ஜெயசூர்யா மீது புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவும் அவர் மீது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது, இந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு இரண்டு வருடம் தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த தடை காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளக்கூடாது என ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறந்த சனத் ஜெயசூர்யா தற்போது முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை பெற்றுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>