எடப்பாடி பழனிசாமியிடம் பஞ்சாயத்து! கடுகடுத்த கே.சி.வீரமணி

வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர்.

வருமான வரித்துறை சோதனைகளும் 300 கோடி ரூபாய் நிலப் பரிவர்த்தனையின் பின்னணியில் எழுந்த சர்ச்சைகளும் வீரமணியின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. இதனால் சென்னைப் பக்கமே வராமல் வேலூரிலேயே முடங்கிக் கிடந்தார். இன்று இரவு சமரசம் பேசுவதற்காக வீரமணியை வரவழைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்பு உறவும் வலுப்படுமா என வீரமணி தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதைப் பற்றிப் பேசும் வீரமணியின் நெருங்கிய வட்டாரத்தினர், ' வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயந்தி பத்மநாபன், பாலசுப்ரமணி, சோளிங்கர் பார்த்திபன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்து எம்எல்ஏக்களாக இருந்தனர். இவர்கள் 3 பேரையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்காததால், அமமுக பக்கம் தாவிட்டார்கள் என்பதுதான் எடப்பாடி வைக்கும் குற்றச்சாட்டு. இதற்கும் வீரமணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

சொல்லப் போனால் இவர்கள் மூவரும் வெற்றி பெறுவதற்காக செலவு செய்தவர் வீரமணிதான். ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடியின் கருத்துக்களுக்கு எதிர்வாதம் வைப்பவர்கள் வீரமணியும் சி.வி.சண்முகமும்தான். பிஜேபி கூட்டணியையும் இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார்கள். இனியும் இவர்களை வளரவிட்டால், தன்னுடைய தலைமைக்கு ஆபத்து என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் வருமான வரித்துறை சோதனையை நடத்த வைத்தார். வரும் நாட்களில் வீரமணி முரண்டு பிடிப்பது அதிகமானால், மத்திய ஏஜென்சிகளை ஏவிவிடவும் முடிவு செய்திருக்கிறார். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்படும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி' என்கின்றனர்.

-அருள் திலீபன் 

More News >>