ஜெனீவா ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்... கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!

இந்திய விமானியின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டது என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பால்கோட் தாக்குதலை அடுத்து இன்று இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்தது. அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் என்பவரைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. மேலும் அபினந்தன் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா ஒப்பந்தத்தின் படை மற்ற நாடுகளின் வீரர்களை கொடுமைப்படுத்துதல், மோசமாக காட்சி படுத்துதல் கூடாது. ஆனால் இதனை மீறி விமானியின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது மத்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

More News >>