உயிரைவிடவும் தயாராக இருக்கிறோம்! அதிமுக, திமுகவுக்கு எதிராக வரிந்துகட்டும் வீரலட்சுமி

எடப்பாடி பழனிசாமி பக்கம் விசுவாசத்தைக் காட்டி வந்த தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் எனப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே சிறிய கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு தங்களுடைய லெட்டர் பேடில் இருந்து ஆதரவு கடிதம் கொடுப்பார்கள்.

அந்தந்த கட்சிகளின் தரத்துக்கேற்ப போயஸ் கார்டனில் இருந்து கணிசமான தொகைகள் ஒதுக்கப்படும். திமுகவும் தங்கள் பங்குக்கு உதவிகளைச் செய்வது வழக்கம்.

இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் சிறிய கட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்து வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டார் வீரலட்சுமி.

நோட்டாவை விடவும் குறைவான வாக்குகள் வாங்கியதால் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இதன்பிறகு வைகோவிடம் சண்டை போட்டுவிட்டு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இதன்பிறகு ஒரு தமிழராக எடப்பாடியை ஆதரிக்கிறேன் என ஸ்டேட்மெண்ட் விட்டவர், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். இதைப் பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக திமுக கட்சிகளை வெறுத்து மாற்றத்தை விரும்பும் வாக்காள பெருமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற எங்கள் உயிரையும் தியாகம் செய்வோம்.

நம்பிக்கையோடு இருங்கள் உறவுகளே. இந்த மகத்தான பணிக்காக மானத்தை தவிர அனைத்தையும் இழந்து நாம் நிற்கதியாக நிற்கின்றோம். ஓய்வூதியம் வாங்கும் வயதில் அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று அணி நாங்கள் தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. அஇஅதிமுக திமுகவுக்கு மாற்று அணியை நாங்கள் கட்டியமைப்போம்' எனக் கூறியிருக்கிறார்.

அருள் திலீபன்

More News >>