அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5+1 தொகுதிகள் .? நாளை அறிவிப்பு வெளியாகலாம் என பரபரப்பு தகவல்!

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவெடுத்து விட்டதாகவும், 5 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுகவுடன் கூட்டணிப் பேரத்தை ஏகப்பட்ட டிமாண்டுகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக தேமுதிக நடத்தி வந்தது. திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சு நடத்தப்பட்டதில் ஓரளவுக்கு சுமூகமாக இருந்தாலும் சீட் பேரத்தைவிட தேமுதிக எதிர்பார்த்த பண பேரம் திகைப்பை ஏற்படுத்த வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று கழட்டி விட்டு விட்டது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், கட்சியின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷும் பங்கேற்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பின் அதிமுக கூட்டணியில் இணைவது என முடிவு செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்டு முதலில் முரண்டு பிடித்தது தேமுதிக . தற்போது தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தேமுதிக அதிமுகவில் சேருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும், யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது போன்ற அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>