இந்திய அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட் - 8 பேர் ஒற்றை இலக்கை தாண்டாத பரிதாபம்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கடந்த போட்டிகளை போலவே, இந்த போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினர். கே.எல்.ராகுல் 7 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் முரளி விஜய் 8 ரன்களில் வெளியேற 13 ரன்களுக்கு 2 விக்கெட் என்றானது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, புஜாரா இணை ஆமை வேகத்தில் ஆடியது. அதிலும் புஜாரா முதல் ரன்னை தனது 54ஆவது பந்தில் தான் எடுத்தார்.

இதன் மூலம் முதல் ரன்னை எடுப்பதில் அதிக பந்தை எடுத்துக் கொண்டவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 61 பந்துகளை சந்தித்தது தான் ஆமை வேக ரன் தொடக்கம் ஆகும்.

பின்னர் விராட் கோலி, 101 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 97ஆக இருந்தபோது விராட் கோலி 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். 179 பந்துகளில் தான் புஜாரா அரைச்சதம் அடித்தார்.

அடித்த வேகத்தில் புஜாரா வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 144 ரன்கள் ஆக இருந்தது. மேற்கொண்ட 43 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 187 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. குறிப்பாக இந்திய அணியில் 8 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஏடன் மார்க்ரம் 2 ரன்களில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 4 ரன்களிலும், ரபாடா ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் இருந்தனர்.

More News >>