40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்! தினகரனை இயக்குவது யார்?

திமுகவோடு நல்ல உறவில் இருந்த தினகரன், தற்போது ஸ்டாலினுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார். இதன்பின்னணியில் டெல்லியின் தூண்டுதல்கள் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அதிமுக வட்டாரத்தில்.

இதைப் பற்றிப் பேசும் அதிமுக பொறுப்பாளர்கள், சட்டமன்றம் கூடும் நேரத்தில் நாளை என்ன கேள்விகள் வர இருக்கின்றன, அதற்கு என்ன மாதிரியான விளைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்குத் தெரியப்படுத்தாமல் தினகரனுக்குத் தெரியப்படுத்தி வந்தனர் திமுக எம்எல்ஏக்கள்.

இதனால் விஜயதரணி உள்ளிட்டவர்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஒருகட்டத்தில் ஸ்டாலினை தினகரன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வந்தன. ஒரே ஓட்டலில் இருவரும் தங்குவது என்ன தவறு என துரைமுருகனும் கேள்வி எழுப்பினார். சென்னையில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில் காலை நேர வாக்கிங்கில் இருவரும் சந்தித்துப் பேசினர் என்ற செய்தியும் வெளிவந்தது. இந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொண்டனர். திருட்டு ரயில் ஏறிவந்தவர்கள் என கருணாநிதி குடும்பத்தை விமர்சித்தார் தினகரன்.

இதற்குப் பதிலடி கொடுத்த முரசொலி ஏடு, 20, 120, 420 என தினகரனை கேலி செய்தது. இதன் பின்னணியில் உளவுத்துறையின் வேலைகள் அடங்கியிருக்கின்றன. ஆர்கேநகர் தேர்தலில் திமுகவை டெபாசிட் இழக்க வைத்தார் தினகரன். மாநிலம் முழுக்க சிறுபான்மையினர் வாக்குகளும் ஓரளவுக்குத் தினகரன் பக்கம் வர வாய்ப்புள்ளது.

அப்படி வந்தால் திமுக அணி பலவீனப்பட்டுவிடும் என டெல்லி கணக்கு போடுகிறது. அதனால்தான் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கின்றனர். அமித் ஷாவிடமும் தினகரன் தரப்பினர் நல்ல நட்பில் உள்ளனர். அதிமுக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, திமுக காங்கிரஸ் அணி முழுமையாக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான் டெல்லியின் விருப்பம். அதற்குத் தினகரனும் இசைவு தெரிவித்துவிட்டார் என்கிறார்கள் அழுத்தமாக.

More News >>