தேமுதிக கறார்... பாமக பிடிவாதம்... உடைகிறது அதிமுக கூட்டணி?

லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது.

பாமகவை வளைத்துப் போட்டு அதிரடி காட்டியது அதிமுக. ஆனால் தேமுதிக விவகாரத்தில் அப்படி அதிரடியை காட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக.

இதனால் கடுப்பாகிப் போன பாஜக மேலிடம், ஓபிஎஸ்ஸை நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் ஜெயக்குமாரையும் சேர்த்து அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடியார்.

விஜயகாந்தைப் பொறுத்தவரையில் 7 தொகுதிகள் கொடுத்தே ஆக வேண்டும் என பிடிவாதம் காட்டுகிறார். அவரது மனைவி பிரேமலதாவோ 6 தொகுதிகள் வரை ஓகே சொல்லி இருக்கிறார்.

இந்த எண்ணிக்கையைவிட தேமுதிக கேட்கும் தொகுதிகள்தான் இப்போது சிக்கலாகி இருக்கிறது. அதாவது பாமகவுக்கு என ஒதுக்கப்பட்டவற்றில் 4 தொகுதிகளை தேமுதிக கேட்கிறதாம். இது பாமகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால்தான் தேமுதிகவுடன் கூட்டணி முடிவுக்கு வராமல் இருக்கிறதாம். தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் பாமக அதிருப்தி அடையும். அந்த தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தேமுதிக கூட்டணியில் இணையாது. இதனால் முதல்வர் எடப்பாடி தரப்பு படு அப்செட்டில் இருக்கிறதாம்.

- எழில் பிரதீபன்

More News >>