முடிந்தால் பிடித்து பார் - மைதானத்தில் துரத்திய ரசிகர்.... ஓடி விளையாடிய தோனி

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் மகேந்திர சிங் தோனி மீது இருக்கும் கிரேஸ் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை. அதற்குக் காரணம் அவரின் செயல்கள்தான். கேப்டனாக இல்லாவிட்டாலும், கோலிக்கு ஐடியா கொடுப்பது, ஆக்டிங் கேப்டன் போல் பௌலர்களுக்கு ஐடியா கொடுத்து விக்கெட் எடுப்பது, விரைவாக ஸ்டெம்பிங் செய்வது, அவ்வப்போது தவறு செய்யும் வீரர்களைக் கண்டிப்பது, ஜூனியர் வீரர்களுடன் ஜாலியாக விளையாடுவது என அவர் செய்யும் விஷயங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்தான்.

தோனி களத்தில் புகுந்துவிட்டாலே அவரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிடுகிறார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி. சிலர் ஆர்வ மிகுதியில் மைதானத்துக்குள் புகுந்துவிடுவார்கள். இந்த சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. இன்றைய போட்டியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடந்துவருகிறது. இந்திய அணி வீரர்கள் முதல் பேட்டிங்கை முடித்துவிட்டு பீல்டிங் செய்வதற்காக களம் புகுந்தனர்.

அப்போது அங்கு ரசிகர் ஒருவர் தோனியை நோக்கி ஓடிவர இதைப் பார்த்த தோனி, ரோஹித் ஷர்மா பின்னால் ஒளிந்துகொண்டார். இருந்தும் அந்த ரசிகர் விடாமல் துரத்தினார். தோனியும் ரசிகரை துரத்திவரும்படி அவருடன் விளையாடினார்.

சிறிது தூரம் சென்ற பிறகு அந்த ரசிகருக்கு கைகொடுத்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தார். இந்த வீடியோ, புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

More News >>