மத்திய அரசு மூடி மறைத்தது, நாங்கள் வெளியிட்டோம் - இந்து என்.ராம்

'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் விவகாரம் பூதாகரமாகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ரஃபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கடுஇமையான விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தின் ரஃபேல் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார்.

' ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளது. ஒருவேளை அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். எனவே அதனைச் சமர்ப்பிக்க முடியாது” என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வேணுகோபால் வாதிட்டார். மேலும் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தை வெளியிட்டதை கண்டித்து வாதிட்டார்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ‘இந்து’ வெளியீட்டு குழும தலைவர் என்.ராம் , '' உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவாதம்பற்றி பேச விரும்பவில்லை. ரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை அவை மிகவும் நம்பகமான ஆவணங்கள். இந்த விவரங்களை மத்திய அரசு மூடி மறைத்து வைத்திருந்தது. அதனால் பொதுநலன் கருதி அந்த ஆவணத்தை வெளியிட்டோம்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டத்தின்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இவற்றைத் திருட்டு ஆவணங்கள் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் கவலைப்படமாட்டோம். அந்த ஆவணங்கள் ரகசிய வட்டாரங்களிலிருந்து கிடைத்தன. அந்த வட்டாரங்களின் அடையாளத்தை எங்களால் சொல்ல முடியாது. இந்த உலகில் எந்த சக்தி கேட்டாலும் அந்த ஆவணங்களை யார் கொடுத்தார் என்பதை நாங்கள் சொல்லமாட்டோம்’’ என்று தீர்க்கமாகக் கூறியிருக்கிறார்.

 

More News >>