திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 9, 10 தேதிகளில் நேர்காணல் - ஆதரவாளர்களை அழைத்து வரத் தடை

திமுக சார்பில் 21 சட்ட மன்ற இடைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் வரும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9-ந் தேதி காலை 9 மணி முதல் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலும், 10-ந் தேதி காலை 9 மணி முதல் மக்களவைக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடமும் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலின் போது சம்பந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள், பொதுக்குழு, பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் என்று கூறப்பட்டுள்ளது.

நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்களையோ, சிபாரிசுதாரர்களையோ கண்டிப்பாக அழைத்து வரக்கூடாது என்றும் திமுக தலைமை தடை விதித்துள்ளது.

More News >>