`இங்கே ஏன் மது குடிக்கிறீர்கள்? - தட்டிக்கேட்ட இளைஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்த கும்பல்!

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் மது அருந்திகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்களை அந்த கும்பலினர் மிரட்டி தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த தாட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் என்பவர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பலினர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மதுசூதனை சரமாரியாக வெட்டினர். இதில் மைதானத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மதுசூதனன். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வெட்டு காயங்கள் அதிகமாக இருந்து ரத்தம் நிறைய வெளியேறியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதில் அவரை வெட்டியது தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் அடிக்கடி இந்த மைதானத்தில் மது அருந்திவிட்டு அவ்வழியாக செல்வபவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும், அதை தட்டிக்கேட்டபோது தான் மதுசூதனை அவர்கள் வெட்டிக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>