கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோவை சரளா ஐக்கியம் - தேர்தலிலும் போட்டியிடுகிறார்

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல சிரிப்பு நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கோவை சரளா களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமல், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளிலும் மும்முரம் காட்டி வரும் கமல், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் பணியையும் முடித்துவிட்டார். 40 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்துள்ளனர்.

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கமலஹாசன் முன்னிலையில் தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கவுண்டமணி, செந்தில், வடிவேல் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் திரைப்பட ரசிகர்களை நகைச்சுவை நடிப்பால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் கோவை சரளா.சினிமா படங்களில் கொங்கு பாஷையில் கலக்கிய கோவை சரளாவை கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் களமிறக்கவும் கமல் முடிவு செய்துள்ளாராம்.

More News >>