தென் மண்டலத்தில் தொகுதிகளை கூட்டணிகளுக்கு வாரியிறைக்கும் திமுக - 10-ல் இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிட திட்டம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 தென்மாவட்டங்களில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளை கிட்டத்தட்ட பேசி முடித்துவிட்டது திமுக தலைமை. இதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதும் கசிந்துள்ளது. இதன்படி தென் மாவட்ட தொகுதிகள் பெரும்பாலானவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு வாரி வழங்கியுள்ளது திமுக.

காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய 5 தொகுதிகளும், தென்காசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. இதனால் தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே திமுக நிற்கப் போகிறது.

இதே போன்று தான் கொங்கு மண்டலத்திலும் திமுக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட உள்ளதாகவும் தகவல். டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை குறிவைத்து திமுக களம் இறங்குவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

More News >>