இமாலய ஸ்கோர் எட்டியும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி ஏன்? கேப்டன் விராத் கோலி சொல்லும் காரணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மைதானத்தை சரியாக கணிக்க தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக, கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார். தவான் தனது 16ஆவது சதத்தை எட்டி, 143 ரன்களுக்கு அவர் வெளியேறினார். கேப்டன் விராட் கோலி 7, லோகேஷ் ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஷாப் பான்ட் (36 ரன்), தமிழக வீரர் விஜய் சங்கர் (26 ரன்) இறுதி கட்டத்தில் கைகொடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில், கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இமாலய இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் சரிவை சந்தித்து, பிறகு மீண்டது. அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதும் மறுமுனையில், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் சிறப்பாக ஆடி, முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 117 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த ஆஷ்டன் டர்னர், இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்னர் 84 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆடுகளத்தின் தன்மை, ஆட்டம் முழுவதும் ஒரே மாதிரியாகவே இருந்தது. மைதானம் மற்றும் பனிப்பொழிவு குறித்த தவறான கணிப்பால் தோல்வி கண்டோம். பனிப்பொழிவால் பந்து ஈரமாகி, பவுலர்கள் சிரமப்பட்டனர். இந்தியாவின் பீல்டிங்கும் சரியில்லை. மாறாக, ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஆடினர். டர்னர், ஹேன்ட்ஸ்கோம்ப், கவாஜா வெற்றியை பறித்தனர்’ என்றார்.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளஹ்டு. தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி, டெல்லியில் வரும் 13ஆம் தேதி நடக்கிறது.

More News >>