ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி செய்த குஜராத் மருந்து நிறுவன இயக்குனர் கைது

புதுடெல்லி: போலி சொத்துகளை கொண்டு வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் குஜராத் மருந்து நிறுவன இயக்குனரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆந்திரா வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கியது. அதன்பிறகு, கடனுக்கான வட்டி மற்றும் அதன் தொகையை அந்நிறுவனம் திரும்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குவர் அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தினர் உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ரூ.4,383 கோடி பணமோசடி செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இல்லாத சொத்துகளின் பேரில் போலியாக கடன் பெற உதவி செய்த ககான் தவான் என்பவர் அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகளால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லியில் கைது செய்யப்பட்டார்.அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஹவாலா மோசட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் பிரகாஷ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீக்ஷித் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தற்போது, ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீக்ஷித்தை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம், காவல் நீட்டிப்பு தொடர்பாக இன்று நடைபெறும் விசாரணையில் அவரை ஆஜர்படுத்தி காவல் நீட்டிப்பு குறிதது கேட்டுக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.

More News >>