பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் இருக்காது முன்பே ரிசர்வ் வங்கி எச்சரித்ததாக பரபரப்பு தகவல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, மத்திய அரசை ரிசர்வ் வங்கி முன்பே எச்சரித்ததாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் கருப்புப்பணம், கள்ளநோட்டுகளை ஒழிப்பதாகக்கூறி, பிரதமர் நரேந்திர மோடி, 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அரசின் திடீர் நடவடிக்கையால், பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

இந்நிலையில், தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பலரும் இருந்த, அப்போதைய ரிசர்வ் வங்கி போர்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமூகச் செயல்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் என்பவர் , தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், இது தெரிய வந்துள்ளது.

பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிப்பதற்கு இரண்டரை மணி நேரத்துக்கு முன்புதான், ரிசர்வ் வங்கி போர்டு கூடி, இது பற்றி விவாதித்து என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதில், ஆர்.பி.ஐ. கவர்னராக இருந்த உர்ஜித் படேல், அப்போதைய பொருளாதார விவகார செயலர் சக்திகாந்த தாஸ், அப்போதைய் நிதிச்சேவை செயலர் அஞ்சலி சிப் தக்கல், ஆர்பிஐ உதவி இயக்குநர்கள் ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா பங்கேற்றிருந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிடிபி வளர்ச்சியை பாதிக்கும். கருப்புப் பணத்தின் பெரும்பகுதி, ரொக்கமாக இருப்பதில்லை என்பதால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, இக்கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டிருந்தது.

மேலும், ஜூன் 2016 முதல், மத்திய அரசும் ஆர்.பி.ஐ.யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வந்துள்ளதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

More News >>