பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் அட்டவணை தயாரிப்பு? கொந்தளிக்கும் கட்சிகள்... மவுனம் காக்கும் ஆணையம்

பாரதிய ஜனதா கட்சி பிரசாரம் செய்ய ஏதுவாக, தேர்தல் அட்டவணையை ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டதில் இருந்தே, சர்ச்சைகளும் வெடிக்கத் தொடங்கின.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி, மதுரை சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அதேபோல், ரம்ஸான் நோன்பு நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

இச்சூழலில், பாரதிய ஜனதா கட்சி பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக, தேர்தல் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. தீவிர பிரசாரம் செய்து, வலுவாக காலூன்றவே பல கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்று, கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு, மாநிலத்தில் அமைதியான சூழலை கெடுத்து ஆதாயம் பெற வேண்டும் என்ற பா.ஜ.க.வின் திட்டமே காரணம் என்று, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல், டெல்லியை சேர்ந்த வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பும், தேர்தல் அட்டவணை பாரபட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. பா.ஜ.க. பலவீனமாக உள்ள மாநிலங்களில் ஒரே கட்டமாகவே தேர்தல் நடக்கிறது. ஆனால், அக்கட்சி கால் பதிக்க விரும்பும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

உதாரணமாக, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் தொகுதிகள் உள்ள பீகாரில், பல கட்ட தேர்தல் நடக்கிறது என்று, அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், முறையாக புகார் அளித்தால் மட்டுமே, ஆணையம் இதற்கு பதிலளிக்கும் என்றார்.

More News >>