பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு நீதி கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது பொள்ளாச்சி பலாத்கார சம்பவங்கள். குற்றவாளிகள் செல்வாக்குமிக்கவர்கள், அரசியல்வாதிகள் வீட்டு பிள்ளைகள் என்பதால் போலீசார் அடக்கி வாசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>