தந்தையின் வைக்கோல் போருக்கு தீ வைத்த கணவன் - உறவினர்களுடன் சேர்த்து எரித்துக்கொன்ற மனைவி

கணவன் அடிக்கடி தகராறு செய்ததால் அவரை உறவினர்களுடன் சேர்த்து மனைவி அடித்து கொலை செய்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மஞ்சுளா. குணசேகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதால் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். மது அருந்திவிட்டு தினமும் உள்ளூர்காரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர். கூடவே மனைவியையும் சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற குணசேகரன் அங்கும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறில் கடுப்பான குணசேகரன் மாமனாருக்கு சொந்தமான வைக்கோல் போருக்கு தீ வைத்துவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார்.

இதனால் அவரை கண்டிக்க மஞ்சுளா உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் மஞ்சுளாவுடன் சேர்ந்து மது போதையில் இருந்த குணசேகரனை கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த குணசேகரன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மஞ்சுளாவின் உறவினர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த குணசேகரன் மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று கிடந்துள்ளார். இதைப்பார்த்த மஞ்சுளா, தன் கணவர் இறந்துவிட்டதாக எண்ணியுள்ளார். உடனே கணவர் கொலை செய்யப்பட்டது வெளியில் தெரியக்கூடாது என எண்ணி அவரின் உடலில் இருந்த காயங்களின் மீது மஞ்சள் பொடியை தூவியதுடன், அவர் தற்கொலை செய்துகொண்டது போல மற்றவர்களை நம்ப வைப்பதாற்காக உயிருடன் இருந்த குணசேகரன் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் அலறித்துடித்த குணசேகரன் சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

குணசேகரனின் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரள நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார் மஞ்சுளா. குணசேகரன் தகராறு பேர்வழி என்பதால் மஞ்சுளாவின் குற்றத்துக்கு ஊர் மக்களும் உடந்தையாக மாறினர். இரவோடு இரவாக குணசேகரனின் உடலை அப்புறப்படுத்தி அங்குள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு கட்டைகளை அடுக்கி தகனம் செய்ய ஊர் மக்கள் முயல இதனை அறிந்த குணசேகரனின் உறவினர் பழமலை என்பவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி மஞ்சுளா உள்ளிட்டோர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். போலீசார் குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>