மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு - சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புகார்

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்கள் பலர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட கும்பலில் ஆளும் கட்சி புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தில் துணை சபாநாயகர் ஜெயராமனின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் தன் மீதும் குடும்பத்தினர் மீதும் வீண் பழிசுமத்தி அவதூறு பரப்பப்படுவதாக சென்னையில் போலீஸ் டிஜிபியிடம் துணை சபாநாயார் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் செய்திருந்தார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரை விசாரித்து வந்த சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பியதான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீதான புகாரில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

More News >>