நேரடிப் போட்டியை தவிர்க்கும் திமுக, அதிமுக ...! தொகுதி ஒதுக்கீடு இழுபறிக்கு இதுதான் காரணமாம்

திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த முள்ள 39 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள் தலைமையில் மெகா கூட்டணி உறுதியாகிவிட்டது. இரு கட்சிகளுமே கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 19 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு எஞ்சிய 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுக, அதிமுக இடையேயான இந்த 20:20 மோதலில் இரு கட்சிகளுமே நேரடியாக களம் காணப் போவது என்னவோ ஒரு சில தொகுதிகளாகத் தான் இருக்கப் போகிறது.

இரட்டை இலையும், உதயசூரியனும் நேரடி மோதலைத் தவிர்த்து, வெற்றி எளிதாகும் என நினைத்து எதிர்க் கூட்டணியில் பிற கட்சிகள் போட்டி யிடும் தொகுதிகளைக் குறிவைக்கின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல் தேமுதிகவின் 4-ல் இரண்டிலும், பாஜகவின் 5-ல் மூன்று தொகுதிகளிலும் திமுக களம் காண எண்ணுகிறது. அதே போல ஒரே ஒரு தொகுதியைப் பெற்று போட்டியிடும் புதிய புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஆகியவை போட்டியிடும் தொகுதிகளையும் திமுக குறிவைக்கிறது. இப்படிப் பார்த்தால் அதிமுகவுடன் திமுக நேரடி மோதல் 7 தொகுதிகளில் தான் இருக்கப் போகிறது.

இதே பாணியைத்தான் அதிமுக தரப்பிலும் பின்பற்றப்படுகிறதாம். காங்கிரஸ் மற்றும் இதர க் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்க மறுத்து அதிமுக வே போட்டியிட திட்டமிடுகிறதாம்.

இதனால் இரு பெரும் கட்சிகளுமே வம்படியாக சில தொகுதிகளை தள்ளி விடுவதை ஏற்க மறுத்து சிறிய கட்சிகள் முரண்டு பிடித்து வந்த தே தொகுதிப் பட்டியல் தாமதத்திற்கு காரணம் என்றாலும் இன்று இரு கூட்டணியுமே தொகுதிப் பட்டியலை அறிவித்துவிடத் தயாராகி விட்டன.

More News >>