கண்ணியத்துடன் வாக்களிக்க வாங்க..திருமண அழைப்பிதழ் வடிவில் தேர்தலுக்கு நூதன அழைப்பு

திருமண அழைப்பிதழ் வடிவில், தேர்தலில் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் அழைப்பது போல் அச்சிடப்பட்டுள்ள வித்தியாசமான அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்கள் பிரபலமாகி விட்ட இந்த நவீன யுகத்தில் இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் வித்தியாசமாக எதையாவது சிந்தித்து து வாடிக்கையாகிவிட்டது. தற்போது நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில் தேர்தலை முன்வைத்து வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.

தன் மகள் திருமணத்திற்கு அடித்த அழைப்பிதழில் ஒருவர், மொய்ப் பணம் வேண்டாம், தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இது போன்று அவரவர் தான் சார்ந்த கட்சிக்கு பிரச்சாரக் களம் போல் செயல்பட, திருச்சியைச் சேர்ந்த ஒருவரோ வித்தியாசமாக சிந்தித்து மக்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவதை வலியுறுத்தி அழைப்பிதழ் தயாரித்துள்ளார்.

கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்ற தலைப்பில், இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து அச்சடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதி அடங்கியுள்ள பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பெயரில், வாக்குப்பதிவு நாள் , நேரம், யார் ? யார்? வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களுடன் முக்கியமாக அன்பளிப்பு பெறுவதும், கொடுப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றம் என்ற பின்குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த நூதன வித்தியாசமான அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளதுடன் வலைதளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>