திமுகவில் கலகம் மூட்டுவாரா அழகிரி.. ஒரு வாரம் பொறுத்திருங்கள் என பளிச் பதில்

திமுக குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கப் போவதாக மு.க.அழகிரி கூறியுள்ளார். இதனால் அழகிரி என்ன மாதிரி குண்டு போடப் போகிறாரோ? என்ற கலக்கத்தில் உள்ளனர் உடன்பிறப்புக்கள்.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மிகவும் அமைதி காத்து வரும் மு.க.அழகிரி சமீபத்தில் இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணி தோற்கும் என்று ஒரே ஒரு பதில் கூறி திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகப் போகும் சமயத்தில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.அழகிரி. இதனால் இன்று என்ன சொல்லப் போகிறாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மிகவும் கூலாக திமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளி வரட்டும். ஒரு வாரம் பொறுத்திருங்கள். வேட்பாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.

திமுக கூட்டணியில் மதுரையில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன், உங்களைச் சந்தித்து ஆதரவு கேட்கப் போவதாகத் தெரிவித்துள்ளாரே? என்று கேட்டதற்கும், ஒரு வேட்பாளராக அவர் என்னைச் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதில் தவறொன்றுமில்லையே என்றவர் தம்முடைய ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன் என சஸ்பென்ஸ் வைத்தார்.

இதனால் தேர்தல் நெருக்கத்தில் மு.க.அழகிரி என்ன மாதிரி குண்டு வீசப் போகிறாரோ என்ற கலக்கம் திமுகவில் ஏற்பட்டுள்ளது.

More News >>