இந்த ஆறு தொகுதிகளில் போட்டியிடாதது ஏன் - டிடிவி தினகரனால் பின் வாங்குகிறதா திமுக

திமுகவுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அதிமுக. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த திமுக, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், வேட்பாளர்களின் பட்டியலையும் விறுவிறுப்பாக அறிவித்துவருகின்றன. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. பாமக தேமுதிக இடையே நடந்த இழுபறி தான் இந்த தாமதம் எனக் கூறப்பட்டது. அதனால் தான் ராமதாஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் விஜயகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பயனாக தற்போது இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. தற்போது எந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திமுகவும், அதிமுகவும் நேரடியாக எட்டு இடங்களில் மோதுகின்றன. குறிப்பாக திமுகவின் தொகுதி பட்டியலில் தென் தமிழகத்தில் முக்கிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென் தமிழகத்தில் முக்கிய தொகுதிகளாக கருதப்படும் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் திமுக நின்றால் அங்கு வெற்றி கிடைக்கும் என்பது இழுபறியான காரியமே. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திமுக நடத்திய கள ஆய்வில் இங்கு வேட்பாளர்கள் நியமிப்பது சவாலான விஷயம் என்பது தெரியவந்தது.

இந்த ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க கூடியவர்கள் முக்குலத்தோர் சமூகத்தினரும், நாடார்களும் தான். இந்த தொகுதிகளில் அதிமுகவில் இருந்த பெரும்பாலானோர் தற்போது டிடிவி தினகரன் பின்னல் அணி திரண்டுள்ளனர். கூடவே அவரது சமுதாயத்து வாக்குகளும் கிடகிக்கும். நிச்சயமாக டிடிவி தினகரன் வாக்குகளை பிரிப்பார். இதனால் இங்கு அதிமுகவும் வெற்றிபெற முடியாது. அதேபோல் மதுரையில் அழகிரி எதிர்ப்பு இருப்பதால் திமுகவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது உறுதி. இதுபோன்ற காரணங்களை அலசி ஆராய்ந்து தான் இந்த தொகுதிகளில் திமுக நிற்கவில்லை. கூடவே பழைய வாக்கு சதவீதங்களை, செல்வாக்குகளை வைத்து காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தொகுதிகளை கேட்டதால் உடனே கொடுக்கப்பட்டுவிட்டது.

அதேநேரம் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு காரணம் அங்கு அதிமுக மீதான மக்களின் எதிர்ப்பு எண்ணம் தான். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இன்னும் அதிமுக மீதான மக்களின் கோபம் தணியாமல் இருக்கிறது. கூடவே காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் வாக்குகளும் வலுவாக இருக்கிறது. இதனால் அங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று கருதியே அங்கு வேட்பாளரை நிறுத்த திமுக முடிவு செய்துள்ளது. அங்கு கனிமொழி நிறுத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதனால் தூத்துக்குடிக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து வருகிறார் கனிமொழி" என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

More News >>