பேருந்து கட்டண குறைப்பு கண்துடைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின்

சென்னை: பேருந்து கட்டணத்தை அரசு குறைத்துள்ளது வெறும் கண் துடைப்பே எனவும் இதனை முழுவதுமாக திரும்பப்பெற வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 19ம் தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்டை வெளியிட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பொது மக்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், இன்று காலை பேருந்து கட்டணத்தை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது. முடிந்தவரை கட்டணத்தை குறைத்துள்ளதாகவும், பொது மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில், கட்டண குறைப்பு வெறும் கண்துணைப்பு என அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலின் கூறியதாவது: எதிர்க்கட்சிகள், மக்கள், மாணவர்கள் போராடியதால் பெரியளவுக்கு பேருந்து கட்ணடம் குறைக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதும் திறும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் நடத்தப்படும்” என கூறினார்.மேலும், “நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும். மறியல் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தராது. அதனை மீறியே மறியல் போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

More News >>