மீண்டும் உச்ச நட்சத்திரங்களை இயக்கப் போகும் `நேர்கொண்ட பார்வை இயக்குநர்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்பொழுது தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்குப் பிறகு இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் வினோத்.

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

செய்தி என்னவென்றால், முதலில் அஜித்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்க ஹெச்.வினோத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தை மட்டுமே அஜித்துக்கு இயக்குகிறார் வினோத். ஏனெனில் சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். கதை கேட்டு ஆச்சரியமாகிவிட்டாராம் ரஜினி. உடனடியாக படம் பண்ணவும் விரும்புவதாக வினோத்திடம் தெரிவித்திருக்கிறார் ரஜினி. தற்பொழுது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படமும், வினோத் இயக்கத்தில் அஜித் படமும் முடிந்த கையோடு ரஜினி - வினோத் கூட்டணி இணையலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படம் மட்டுமின்றி, விஜய்க்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் வினோத். அந்தக் கதையும் விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆக, அஜித் படத்துக்குப் பிறகு, உச்ச நடிகர்களான ரஜினி, விஜய் படங்களையும் இயக்க தயாராகிறாராம் வினோத். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு படங்களுக்குப் பிறகு நேரடிய உச்ச நடிகர்களின் படத்தை இயக்குவது நிச்சயம் பெரிய விஷயம் தான் என்று பேசிக்கொள்கிறார்கள் கோலிவுட்டினர்.

More News >>