`குடும்ப வாரிசுகள் அல்ல கொள்கை வாரிசுகள் - வேட்பாளர் சர்ச்சைக்கு முரசொலியில் விளக்கம்

வாரிசு வேட்பாளர்கள் குறித்து முரசொலி நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் வெளியானதிலிருந்து சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான். மொத்தம் 20 மக்களவை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளில் 6 பேர் வாரிசு வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.

வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, வேலூரில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கொளதம் சிகாமணி, தூத்துக்குடியில் கருணாநிதியின் மகள் கனிமொழி, தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த சர்ச்சைக்கு முரசொலி நாளிதழில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ``குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்'' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், `` வாரிசுகள் என்பதற்காக மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை, கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதால் தான் அவர்கள் பரிசீலனைக்கு உள்ளாகிறார்கள். டாக்டர் கலாநிதி வீராசாமி , ஆற்காடு வீரசாமியின் குடும்ப வாரிசு மட்டுமன்றி, கொள்கை வாரிசுகளில் ஒருவராகத் திகழ்பவர். தமிழச்சி தங்கப்பாண்டியன், கட்சிப் பணிக்காக பேராசிரியர் பதவியை துறந்து, திமுக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர். இதேபோல் முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்கள், தந்தையுடன் சேர்ந்து கட்சிக்கு ஆற்றிய பணிகள் புறந் தள்ளப்பட வேண்டுமா" எனக் கூறப்பட்டுள்ளது.

More News >>