பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு - இந்திய வேளாண் துறை

2018-2019 வேளாண்பருவ ஆண்டில் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என இந்திய வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிக பரப்பளவு, பருவ நிலை மற்றும் மேம்பட்ட விதைகள் விநியோகம் போன்றவற்றால் பருப்பு உற்பத்தி அடுத்த பருவ ஆண்டில் அதிகரிக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் ராபி பயிர்களுக்கான நிலப்பரப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில் 8.71 மில்லியன் டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய ஆண்டில் இதன் அளவு 9.42 மில்லியன் டன்களாக இருந்தது. அடுத்த வேளாண் பருவ ஆண்டுக்கான பருப்பு உற்பத்தி 24 முதல் 25 மில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொத்த பரப்பளவான 16-16.5 மில்லியன் ஏக்கரில் நடப்பாண்டில் கூடுதலாக 2.5 முதல் 3 மில்லியன் டன் பருப்புகள் உற்பத்தியாகும் நிலை இருப்பதால் இறக்குமதி செய்யும்நிலை இனி இருக்காது” என்றார்.

More News >>