சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன்.. கே.எஸ். அழகிரி விளக்கம்

சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்றும், அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும் தற்போதைய சபாநாயகருமான வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இழுபறியாக இருக்கிறது. இதற்கு அத்தொகுதியைக் கேட்டு ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. சுதர்சன் நாச்சியப்பன் சேர்ந்ந்து மல்லுக்கட்டுவது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிாஸ் வேட்பாளர்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், வசந்தகுமார், ஜெயக்குமார், ஜோதிமணி, விஷ்ணுபிரசாத் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்றார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். சிவகங்கை போல் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் இந்தப் பிரச்னை உள்ளது. இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவில் விவாதித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வரவுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

More News >>