ரஸ்ஸலின் பவர் ஆட்டம்... - கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 2-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் காயத்தால் அவதிப்படுவதால், கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்றுள்ளார். இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோ இணை ஓப்பனிங் கொடுத்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த சீசனில் விளையாடமல் இருந்த டேவிட் வார்னர் இந்த முறை களமிறங்கி சிறப்பாக விளையாடினார். கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்த அவர் தான் இன்னும் பார்மில் தான் இருக்கிறேன் எனக் கூறும் அளவுக்கு வெளுத்து வாங்கினார்.

வார்னர், பேர்ஸ்டோ ஓப்பனிங் 100 ரன்களை கடந்து நீட்டித்து. 118 ரன்களாக இருந்தபோது பேர்ஸ்டோ அவுட் ஆனார். தடைக்கு பிறகு விளையாடிய முதல் போட்டியிலேயே அரை சதம் கடந்த வார்னர் 85 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆனார். இருப்பினும் விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடினார். அவரின் அதிரடியால் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் ராணா ஆகியோர் துவக்கம் தந்தனர். இதில், கிறிஸ் லின் விரைவாக வெளியேறினாலும், ராணா நிலைத்து நின்றார். ஹைதராபாத் பந்துவீச்சை எளிதில் சமாளித்த இவர் 68 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்க பலமாக ராபின் உத்தப்பா விளையாடினார். இந்தக் கூட்டணி 80 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்த நிலையில் இருவரும் அடுத்தது வெளியேறினர். இருப்பினும் கடைசி கட்டத்தில் கூட்டணி சேர்ந்த இளம்வீரர் சுப்மன் கில் - ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி வாகை சூடியது. அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சுப்மன் கில் இரண்டு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

More News >>