18 பந்துகளில் அரைசதம்... முதல் 200 ரன் டார்கெட்.... - ரிஷப் பான்ட் ஆட்டத்தால் மும்பைக்கு இமாலய இலக்கு!

ஐபிஎல் 2019 சீசன் நேற்று ஆரம்பித்தது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி - டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மும்பை அணியில் புதுமுக வீரராக ரஷிக் ஸலாம் என்ற 19 வயது இளைஞர் களம் கண்டார்.

அதன்படி டெல்லி அணிக்கு தவான் - பிரித்திவி ஷா தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரித்திவி ஷா 2வது ஓவரிலேயே 7 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 16 ரன்களில் வெளியேற அணி தடுமாறியது. இருப்பினும் தவான் - இங்கிராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டெடுத்தனர். இதில் இங்கிராம் 47 ரன்களில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற அவரை தொடர்ந்து தவானும் 43 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் நட்சத்திர வீரர் ரிஷப் பான்ட் அதிரடியாக விளையாடினர். மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் 18 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

அவர் சிறப்பாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசி ஓவர்களில் பான்ட் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக மிட்சேல் மெக்லெங்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கவுள்ளது.

More News >>