20nbspஆண்டு கனவு...மக்கள் பிரதிநிதியாக வேண்டும்... தமிழிசையின் உருக்கமான கடிதம் இதோ...

தமிழக தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்காக ஓர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அவரின் கடிதத்தில், "சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு வளர்ந்தவள். நான் பள்ளியில் படிக்கும்போதும், மருத்துவம் படிக்கும்போதும், உயர் மருத்துவம் படிக்கும்போதும்,  வெளிநாட்டில் மருத்துவம் படித்தபோதும் சரி, அடிமட்ட தொண்டராக, இணைந்து இன்று பாஜகவின் தலைவராக உயர்ந்திருக்கும்போதும் சரி, எனது வாழ்க்கை, கடின உழைப்பு, சமூக அக்கறை, அழகாகப் பகிர்ந்துகொள்ளும் அன்பு, இயன்ற அளவுக்குத் தேவையானவர்களுக்கு உதவி செய்வது, நம்பிக்கையூட்டும் அளவுக்குக் கொடுத்த வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்வது என்று என் வேலைகளும் எண்ணங்களும் நேர்மறையாகவே இருக்கும்.

வாழ்க்கை என்பது அன்பும், அழகும், தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்ததாகவே இருக்கும். எனது ஒவ்வொரு நாளும் அதை நிரூபித்துக் கொண்டே இருக்கும். சமூகம் சரிசெய்யப்பட வேண்டும். இந்த பாரதம் உலக அளவில் உயர வேண்டும்.

பசியற்ற பாரதத்தைக் காண வேண்டும். அனைவரும், மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது வேட்கையாகவே இருக்கும். சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கனல் என்னுள்ளே தகித்துக்கொண்டே இருக்கும்.

இந்தக் கனல் உணவில்லாதவர்களுக்கும் உணவளிக்க உதவும். அதேநேரத்தில் சேற்றை அள்ளி வீசுபவர்களுக்கும் சுட்டெரிக்கவும் செய்யும். என் வாழ்க்கை பயமில்லாததாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. என்னால் அது முடியும்,

ஏனென்றால், என்மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. நம்மைப் படைத்த இறைவன் மீதும் அபார நம்பிக்கை உண்டு. இசை நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இணைந்தால், இரும்புத்தன்மை பெறும் என்பது என் நம்பிக்கை.

என்னுடைய பொதுவாழ்வில் 20-வது ஆண்டை தொட்டுவிடக்கூடிய காலகட்டத்தில், மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. மக்கள் பிரதிநிதியாக இருந்தால் என் வாழ்க்கை, இன்னும் பலருக்கும் பயன்படும் என்பது மட்டுமல்ல, என் பொது வாழ்வுக்கு ஓர் அங்கீகாரமாக இருக்கும் என்பதற்காகவும் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியாகப் பல வாதங்களைத் திறமையாகத் தேவையான நேரத்தில் எடுத்து விளக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என, தமிழிசை எழுதியுள்ளார்.

More News >>