ஏப்ரல் 9-ந்தேதி மாலை வரை தான் தேர்தல் கருத்துக்கணிப்பு, மே19 வரை கூடாது - தமிழக தேர்தல் அதிகாரி

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக களத்தில் குதித்துள்ள நிலையால், காங்கிரசும் மற்ற மாநிலக் கட்சிகள் பலவும் பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? ஆட்சியமைக்கப் போவது யார்? என்ற கருத்துக் கணிப்பு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் என்று சமூக வலைதளங்களில் இப்போதே வெளியாகி வருகிறது.

இந்தக் கருத்துக் கணிப்புகள் சரியோ? தவறோ ? என்றாலும் வாக்காளர்களை ஒரு வகையில் திசைதிருப்பும் என்பதால் கடந்த சில தேர்தல்கள் முதலே கட்டுப்பாடு விதிக்க ஆரம்பித்துவிட்டது தேர்தல் ஆணையம். அதன்படி முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை தான் கருத்துக் கணிப்புகளும் வெளியாக வேண்டும் என்றும் அதன் பிறகு கடைசிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் .இதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் நிலையில் பிரச்சாரம் ஏப்ரல் 9-ந் தேதி மாலையுடன் முடிவடைகிறது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் ஏப்ரல் 9-ந் தேதி மாலை 6 மணி முதல் மே 19-ந் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்புகள் எதுவும் வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

More News >>