கெய்லின் அனுபவ ஆட்டம்.... - ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

ஐபிஎல்லின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரஹானே முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் பால் டேம்பரிங் விவகாரத்தால் தடையில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்றுள்ளார். அதன்படி பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் ராகுல் முதலிலேயே அதிர்ச்சி கொடுத்து வெறும் 4 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும் கெய்ல் நிலைத்து நின்றார். அவருக்கு மாயங் அகர்வால் சிறிது நேரம் கம்பெனி கொடுத்தார்.

அகர்வால் 22 ரன்களில் வெளியேறிய பின்பு, சர்ப்ராஸ் கான் கெய்லுக்கு பக்க பலமாக நின்றார். சிறப்பாக விளையாடிய கெய்ல் அரை சதம் கடந்தார் கடந்தார். சிக்ஸர், பவுண்டரி காட்டிய கெய்ல் 79 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். இருப்பினும் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் கடைசி வரை நிலைத்து நின்றார். அவரின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. சர்ப்ராஸ் கான் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. முன்னதாக கிறிஸ் கெய்ல் 6 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களைத் தொட்டார். இதன்மூலம் 4 ஆயிரம் ரன்கள் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையையும், 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 112 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 114 இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை எடுத்தது சாதனையாக இருந்தது.

More News >>