ஏன் இந்த பாரபட்சம்....தூத்துக்குடி கலெக்டருக்கு எதிராக நெட்டிசன்கள் வித்தியாசமான விமர்சனம்

தூத்துக்குடியில் வேட்பு மனுத்தாக்கலின் போது பாஜக வேட்பாளர் தமிழி சையின் மனுவை இரு கைகளில் வாங்கிய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வேண்டா வெறுப்பாக ஒரு கையால் மனுவை வாங்குவது போன்ற படங்களை ஒப்பிட்டு, நீங்க ஒரே கலெக்டர் தான். இரு வேறு முறையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில், நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் தலைமை தேர்தல் ஆணையம் முதல் கீழ் மட்டத்தில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் வரை பாரபட்சமாக செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதிகாரிகளின் இந்த ஒருதலைப்பட்சத்தை எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்தும், புகார் செய்தும் வருகின்றனர். அதை விட நெட்டிசன்கள் செம கலாய்ப்பு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்த ஒரு செயலும் நெட்டிசன்களிடம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும், திமுக சார்பில் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.நேற்று இருவரும் அடுத்தடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழிசையிடம் மனுவை இரு கைகளால் வாங்குகிறார். ஆனால் கனிமொழியிடம் வாங்கும் போது முகத்தை திருப்பிக் கொண்டு இடது கையால் மட்டும் வாங்குகிறார். இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு,ஒரே கலெக்டர் தான்...ஆனால்...

வேட்புமனு வாங்குவதில் இருவேறு முறைகள்.தமிழிசை வேட்புமனு வாங்கும்போது இரண்டு கைகளும் வேலை செய்கிறது.கனிமொழியிடம் வேட்புமனு வாங்கும்போது ஒரு கை ஏன் செயல் இழந்தது..?முகத்தில் ஏன் இத்தனை கடு கடு...? என்று சமூக வலைதளங்களில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

More News >>