இரத்தம் உறைதலில் பிரச்னை: என்ன சாப்பிட வேண்டும்?

உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.    ஒரு மைக்ரோலிட்டர் அளவு இரத்தத்தில் 1,50,000 முதல் 4,50,000 வரையிலான எண்ணிக்கையில் இரத்தத் தட்டுகள் காணப்படும். இரத்த வட்டணு பத்து நாள்கள் வரை மட்டுமே செயல்படும். புதிய வட்டணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகிக்கொண்டே இருக்கும். இரத்த வட்டணு குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் நோய் திராம்போசைடோபினியா  (Thrombocytopenia) என்று அழைக்கப்படுகிறது.   நம் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது மற்றும் இரத்தத்திலுள்ள வேண்டாத பொருள்களை வடிகட்டுவது ஆகிய பணிகளை மண்ணீரல் செய்து வருகிறது. பல்வேறு காரணங்களால் மண்ணீரல் பாதிக்கப்பட்டு, வீக்கமுறுவதால் அதில் இரத்த வட்டணுக்கள் தேங்கி கொள்ளுதல், எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் வட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், இரத்த வட்டணுக்கள் அதிக எண்ணிக்கையில் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இரத்த வட்டணுக்கள் குறைந்து போகின்றன.   இரத்தப் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கான வேதியிய (Chemotherapy) சிகிச்சை, எய்ட்ஸ் என்னும் ஹெச்ஐவி கிருமி தாக்குதல் காரணமாக வட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இதுபோன்ற அசாதாரண உடல்நலக் கேடுகள் இல்லாமல் வைரஸ் கிருமி தொற்று, மஞ்சள் காமாலை (hepatitis C), சில வகை இரத்தசோகை குறைபாடு மற்றும் அதிக அளவு மது அருந்துதல் ஆகிய காரணங்களாலும் இரத்தத்தில் வட்டணுக்கள் குறைய நேரிடும்.   சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வெளியேறுதல், வழக்கத்திற்கு அதிகமான மாதவிடாய், அசதி, மண்ணீரலில் வீக்கம், காயத்திலிருந்து நீண்டநேரம் இரத்தம் வெளியேறுதல், மூக்கு மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருந்ததால் வட்டணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிக்க வேண்டும்.   இரத்த வட்டணுக்களை அதிகரிக்கும் உணவு பொருள்கள்: மாதுளை: மாதுளம்பழத்தில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இது வட்டணு எண்ணிக்கை குறைவதை தடுப்பதோடு, உடலின் ஆற்றலை சமப்படுத்தவும் உதவும்.   பால்: கால்சியம் சத்து குறைபாடும் இரத்தம் உறைதலில் தாமதம் ஏற்பட காரணமாகலாம்.பாலிலுள்ள கால்சியம் சத்து, இரத்த வட்டணுக்கள் புதிதாக உருவாவதற்கு உதவும். பாலில் காணப்படும் 'ஃபைரினோஜன்' (Fibrinogen)என்ற புரதமும், வைட்டமின் கே சத்தும் இரத்த புஷ்டிக்கு காரணமாவதோடு, வட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.    ஆரஞ்சு: உடலில் ஆரோக்கியமான செல் பிரிதல் நடைபெறுவதற்கு ஃபோலேட் (Folate) என்னும் பி9 வைட்டமின் தேவை. இச்சத்து குறைவுபட்டால், வட்டணுக்களும் குறைவுபடும். ஆரஞ்சு பழச்சாறு பருகுதல் இச்சத்தினை தரும்.   பப்பாளி: பப்பாளி மரத்தின் இலை, இரத்த புஷ்டிக்கு உதவும். பப்பாளி இலைகளை பாத்திரத்தில் இட்டு, நீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். தண்ணீர் பாதியளவாக குறையும் வரையும் ஏறத்தாழ கால் மணி நேரம் சூடாக்கவும். இந்தச் சாற்றினை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தினமும் இருமுறை இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றினை எடுத்துக்கொண்டால், இரத்த உற்பத்தி சீராகும்.   காரட்: இரத்த வட்டணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. செல் பிரிதல் மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு காரணமான வைட்டமின் ஏ, காரட் மற்றும் பூசணி ஆகியவற்றில் உள்ளது. இவற்றை அதிகமாக உண்ணலாம்.   முட்டை: செல் வளர்ச்சிக்கு அதிகம் உதவ கூடியது வைட்டமின் கே சத்து ஆகும். வட்டணுக்கள் பத்து நாள்கள் மட்டுமே செயல்புரிவதால், அவை தொடர்ந்து உற்பத்தி செய்யப்படவேண்டும். வைட்டமின் கே, முட்டை, சிவரி கீரை, வெங்காய தழை, அரைக் கீரை மற்றும் கோஸ் தழை ஆகியவற்றில் காணப்படுகிறது.  
More News >>