`இது தவறான முன்மாதிரி மோடி பயோபிக் வெளியாவதில் சிக்கல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிவரும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்பொழுது நம் எல்லோர் மனதிலும் இருக்கும். நாட்டின் மிக முக்கிய தருணமான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் நரேந்திர மோடி பயோபிக் படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு படத்தை ஏப்ரல் 12ல் வெளியிட படக்குழு முன்னர் திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் 11ஆம் தேதியே தொடங்குவதால், படத்தை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 5ல் வெளியிட படக்குழு உறுதி செய்தது.

உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் அரசியல் பின்புலத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சிக் காலமான 2014 முதல் தற்பொழுது வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோடியின் இளமை காலம், எப்படி அரசியலுக்குள் வந்தார் என மோடியின் வாழ்க்கையை குறித்த ஒரு படமாக இது உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே இந்த வெளியாவதால், இந்தப் படம் ஒரு பெரிய அலையை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது.

`இந்த படம் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டால், பா.ஜ.க பிரச்சாரம் செய்வது போல் இருக்கும். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது’ என்று எதிர்கட்சிகள் தேர்தல்ஆணையத்தில் புகார் அளித்தன. அதுமட்டுமின்றி ‘இது தவறான முன்மாதிரியாக இருக்கும் என 47 முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக கடிதம் அளித்தனர். எனவே `தேர்தல் நேரத்தில் ஏன் இந்த படத்தை வெளியிடுகிறீர்கள்’ என்று தேர்தல் ஆணையம் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

More News >>