துரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்

குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான்.

துரித உணவு பொருள்களின் மணம், ருசி ஆகியவற்றுக்கு அடிமையாகிப் போனீர்கள் என்றால் அவ்வளவுதான்! 

பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள் போன்ற 'துரித உணவு' வகைகளை உணவென்றே அழைக்கக்கூடாது. ஏனெனில் உணவில் இருக்கக்கூடிய எந்த ஊட்டச் சத்தும் இவற்றில் இல்லை.

கலோரி என்னும் ஆற்றல், கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை பெருமளவு காணப்படுவதால் இவை உடல் நலத்திற்கு தீங்கு மட்டுமே செய்யும். 

பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவதால் வரக்கூடிய நோய்கள்:

இதய கோளாறு: துரித உணவுகளில் டிரான்ஸ் மற்றும் பூரித கொழுப்பு அதிகம். நெடுநாள் இவற்றை உண்டு வந்தால் இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் என்னும் கொழுப்பு படிந்து இதய நோயை உருவாக்கும். வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் துரித உணவுகளை சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம்.

உடல் பருமன்: பதின்பருவத்தினராகிய இளம் தலைமுறையினர் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. கலோரி, சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ள துரித உணவுகளை உண்பதால் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். தேவைக்கு அதிகமாக உடல் எடை கூடி விடுவதால் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு இலக்காகி விடுகின்றனர்.

இதுபோன்ற உணவுகளை உண்ணும் தலைமுறையினருக்கு காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆகவே இவர்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலில் குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர்.

நீரிழிவு: அதிகப்படியான கலோரி (ஆற்றல்) மற்றும் சர்க்கரை பொருள்கள் கொண்ட துரித உணவுகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு (டைப் 2) பாதிக்கிறது.

'யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. ஆகவே துரித உணவுகளை தவிர்ப்போம். காய்கறிகள் நிறைந்த உணவை ஆரோக்கியமான விதத்தில் சமைத்து சாப்பிடுவோம்.

More News >>