ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் முடிவை கைவிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் அறிமுகம் மற்றும் கடைசி பக்கம் நீக்கத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு, பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், விமான நிலைய சோதனையின்போது பாஸ்போர்ட்டில் உள்ள மேக்னடிக் ரீடரை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

அதனால், குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய கடைசி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.மேலும், குடியுறவு சோதனை (இசிஆர்) தேவை என்ற நிலையில் உள்ள பாஸ்போர்ட்டுகளை ஆரஞ்சு நிறத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் செயல் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.இந்நிலையில், பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் ஆகிய முடிவுகளை கைவிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையே தொடரும் எனவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

More News >>