ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 42 பேர் பரிதாப பலி

கொல்கத்தா: முர்ஷிபாத்தில் உள்ள ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள தாயுலாடாபாத் பகுதியில் பாலிகாத் என்ற பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக நேற்று முன்தினம் சுமார் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

பயங்கர சத்தத்துடன் பேருந்து இடித்து விழுந்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தனர்.

அப்போது, பயணிகள் ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடை அடுத்து, பொது மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகுகளை பயன்படுத்தி பயணிகள் மீட்கப்பட்டனர். அதற்குள் போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் வரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

மேலும், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் செயலாளர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர்.இந்நிலையில், மீட்கும் பணி நேற்றும் தொடர்ந்த நிலையில் மேலும் 10 சடலங்களை மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

More News >>